Monday, January 16, 2012

நம் வரலாற்று பெருமைகளை பதித்து செல்ல வேண்டாமா?


வேறுக்கு நீர்வார்க்கும் சொந்தங்களே வணக்கம்.

வரலாறு என்பது மனித இனம் வளர்ந்த வகைகளையும், அவற்றின் கலை, பண்பாடு, நாகரிகம் பற்றிய செய்திகளையும் தொகுத்து இனிவரும் தலைமுறையினர் அறிந்து கொள்வதற்கு உதவும் வகையில் அளிக்கும் செயற்பாடாகும்.

குலமின்றி இனமில்லை, இனவுணர்வின்றி பண்பாட்டு வளர்ச்சிக்கு வழியே இல்லை. உலகில் வாழும் 700 கோடி மக்களில் நமக்கென்று ஒரு தனித்த அடையாளத்தை தேடித்தருவது தான் குலத்தின் பெருமை. கடலில் கலக்கும் ஒவ்வொரு நீர்துளிக்கும் தனித்துவம் உண்டு. மானுட சமுத்திரத்தில் நாம் அடையாளம் இழந்து விடாமல் நமக்குகென்று தனியாக ஒரு முகத்தையும், முகவரியையும் தருவதுதான் எமது இனமும் குலமும். ஒவ்வொரு பறவைக்கும் தன் கூடே தனியழகு என்ற உண்மையை நாம் எப்போது உணரப்போகிறோம்?

மனுகண்ட சோழனும், அறம் கண்ட சிபியும், நிறைகண்ட செம்பியனும், காவிரி கரைபடைத்த கரிகாலனும், வானுயர் கோயில் தந்த ராசராசனும் வழி வந்த இனமே கள்ளர் இனம். வீரம் செறிந்த நெஞ்சினர், வாளெடுத்து களம் கண்ட மறவர், வேலெடுத்த குலம் என்ற நினைவுகளுடன் நம் இளைஞர்கள் சமுதாய கடமையாற்ற வீறு கொண்டெழ வேண்டுகிறோம்.

பழமையும் பெருமையும் வாய்ந்த நம் இனத்தையும் அதன் மரபுகள் மற்றும் மாண்புகள் பற்றியும் நம் வேர்களை எப்படி இந்த தலைமுறை தேடிப்போய் தெரிந்து கொள்ளப் போகிறது? யார் இதை அடையாளம் காட்டுவது? சர்வதேச கள்ளர் பேரவை இதற்கான ஆய்வுகளை மேற் கொண்டுள்ளது. தங்களிடம் உள்ள கள்ளர் பற்றிய ஆவணங்களையும், குறிப்பேடுகளையும், சான்றுகளையும் தந்துதவுங்கள். பேருதவியாக இருக்கும்.

இந்த தலைமுறையில் வாழும் நாம், அடுத்த தலைமுறைக்கு எதனை விட்டு செல்கிறோம்? நம் காலச் சுவடுகளை வெறும் எண்ணிக்கையாகப் பார்க்காமல் எண்ணங்களாகப் படையுங்கள். நம் வரலாற்று பெருமைகளை பதித்து செல்ல வேண்டாமா? தடம் புரண்ட நம் செல்வாக்கு, உறவுக்கு பெரும் குரல் கொடுத்த நம்முன்ணோர்கள், நாம் கற்றவை, தெரிந்தவை, அறிந்தவை யாவற்றையும் பதிவு செய்திடுவோம். தேடாமல் எதுவும் கிடைக்காது என்ற பேருண்மையை அறிந்திடுவோம்.

இன்று உலகெங்கும் காணமுடியாத தனிப்பட்ட ஒரு பண்பினைக் நம் இனத்தில் மட்டும் காண்கிறோம். கடந்த மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேலாகத் நாம் கொண்ட பட்டங்கள், நாகரிகம், பண்பாடு மற்றும் கலாச்சாரம் போன்றவற்றை மாறாநிலையில் வைத்துக் காத்துள்ள உலகின் ஒரே இனம் கள்ளரினமே. ஆயினும் சமுதாயத் துறையிலும் அரசியல் துறையிலும் முற்காலக் கள்ளர்களுக்கும் இக்கால கள்ளர்களுக்கும் உள்ள உயர்வு தாழ்வின் அளவுகள் மனச்சோர்வழிக்கும் அளவிலேயே உள்ளது.

இன்று கள்ளர் இனம் ஆட்சியுரிமை இழந்து ஓர் ஆளப்படும் இனம். பல நூற்றாண்டுகளுக்கு முன்பே ஆட்சிக்குடிகளின் மரபுகள் கால்வழித் தடமற்று அழிந்துவிட்டன. குருமார், கணிகள், அமைச்சர், படைத்துறைப் பணியாளர், மருத்துவர் ஆகியோர் அடங்கிய ஐம்பெரும் குழுவினர் கூடி மன்னுரிமை ஆட்சியாளருக்கு அறிவுரை வழங்கி ஆட்சி நடத்திய காலம் இன்று இல்லை. ஒரு தேசிய இனம் என்ற முறையில் கள்ளர்குல உயிர்த்துடிப்பு ஆறி அடங்கிவருகிறது என்பது கூட இன்றைய முழு அவலநிலையைச் சித்திரித்து விடவில்லை. கலைகள், தொழில்கள் மடிந்து விட்டன.பழந்தெய்வங்கள் கூட உயிர்ப்பிழந்து போயின. இந்திரனும்,பலராமனும் இன்று வணங்கப்படவிலை. மாயோன் வணக்கம் இன்று இராமன்,கிருஷ்ணன் வணக்கம் ஆகியுள்ளது.

தலை சரியாக இருந்தால் வால் சரியாக இருக்கும் என்று ஒரு சொலவடை சொல்லுவார்கள். தலையாட்டும் வர்க்கமாக இருக்காதீர்கள். தலைமை ஏற்கும் வர்க்கமாக மாறுங்கள். நியாயமாகவும், எதையும் எதிர்கொள்ளும் நேர்மையுடன் இருக்கும் போது எந்த நிகழ்வாலும் நம்மை சீர்குழைக்க முடியாது. நம் பாதையில் இடர் நீக்கி பயணிப்போம். நாம்பயணிக்க வேண்டியது நெடுந்தூரம். தற்பொழுது ஒரு முட்டுச் சந்தில் பயணிக்க வேண்டிய கட்டாயம். ஆனால் வெகு விரைவில் நெடுஞ்சாலைக்கு வந்தாகவேண்டும் என்ற நோக்கில் நம் பயணம் அமைய வேண்டும். மறக்கக் கூடாத பட்டியலின் ஆரம்பமே இது. தளர்ச்சியும், வளர்ச்சியும் வெவ்வேறு பரிமாணங்கள் என்பதனை உனர்ந்துகொள்வோம்

கள்ளர் குல கலாச்சாரம், பண்பாடு, வாழ்க்கை என்பன தொப்புள் கொடி உறவின் உணர்ச்சி மிக்க ஓர் உன்னதமான வரலாறு. புதுக்கோணத்தில் புதையலாய் குலமணம் மாறாமல் தொலைந்து போன மனிதாபிமானத்தைத் தோண்டியெடுக்கும் ஓர் கலாச்சாரப் பதிவாக அமைய வேண்டும். இன்றைய தலைமுறைக்குச் சொல்லப்பட வேண்டிய ஒரு பாசப்போராட்டம். மூன்றாம் தலைமுறைக்கு முதல்தலைமுறை பற்றிய பாசத்தை சொல்லும் ஒரு பதிவாக வேண்டும்

கள்ளர் குல வரலாற்று செய்திகளை ஆய்ந்தறிந்து தொகுத்து பாதுகாத்திடல் நம் ஒவ்வொருவருக்கும் உள்ள கடமையாகும். கள்ளர் இனம் பற்றிய இத்தகைய வரலாற்று விவரங்கள், பழைய ஆவணங்கள், சாசனச்சன்றுகள் மற்றும் தாங்கள் அறிந்த, படித்த, செவிவழிச் செய்திகளை சர்வதேச கள்ளர் பேரவைக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். குலப்பெருமையும் உணராமல், இன உணர்வும் இல்லாமல், ஒற்றுமையுமின்றி மாற்றானுக்கு கொடிபிடித்தே மாயும் நம் இளைஞர்களை காத்திட உதவுங்கள்.

வேரை மறந்து வேறாய் மாறும் போது நமது முகவரியின் மரணம் அருகில் என்பதும் உறுதியாகிவிடும். செய்ய வேண்டிய கடமைகள் இருக்கும் போது யாசித்து பெற வேண்டிய உரிமைகளை துறந்திடுவோம். நம் குல பண்பாட்டையும், நாகரிகத்தையும் விளைநிலங்களான மாணவர்களின் மனவயலில் விதைத்திட உதவுங்கள் என்று சர்வதேச கள்ளர் பேரவை தங்களை உரிமையுடன் விரும்பி கேட்டுக்கொள்கிறது.

சிந்திப்போம் நாம் தொடர்ந்து.

என்றும் உரிமையுடன் உறவைத்தேடும்
ஜெயராம் இராசகண்டியர் கிருபாகரன்
சர்வதேச கள்ளர் பேரவை.
கெவின் கார்டன்.
இங்கிலாந்து.